Monday, June 27, 2016

உடலுக்கு புறம்பாக ஆத்மா கிடையாது என்ற உலகாயுதர்களின் கொள்கையை விமர்சன ரீதியாக ஆராய்க?

மெய்யியல் துறையில் இந்தியாவில் தோன்றிய நாத்திக மெய்யியல்களில் மிகவும் பழமையானது உலகாயுதம் என்று அழைக்கப்படும். வேதத்தின் அதிகாரத்தையும் வேள்விகளின் ஆற்றலையும் மறுத்தலில் இது புத்த, சமண கொள்கைகளுக்கு ஒத்தது. ஆனால் கடவுள் இல்லை என்று அறுதியிட்டுக் கூறியவிதத்தில் இது அவற்றை விடவும் ஒரு தீவிர நாத்திகவாதம் உடையதாகக் காணப்படுகிறது. மேலும் ஆன்மா என்ற ஒன்று இல்லை என்ற கருத்தினால் உலகாயுதம் புத்த சமணக் கொள்கைகளிலிருந்து மட்டுமல்ல இந்திய மெய்யியல் பிரிவுகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டுத் தனித்து விளங்குகின்றது. இருக்கும் வரை இவ்வுலக இன்பம் துய்த்து இறப்பின்போது இல்லாமல் போவோம் என்பது உலகாயுதரின் உறுதிப்பாடு ஆகும்.

உலகாயுதரின் கருத்தை சுருக்கமாக நோக்கினால் அழியாமல் என்றும் இவ்வுலகில் இருப்பவை நிலம் , நீர், நெருப்பு, காற்று என்பவையாகும். இதன் இயல்புகள் முறையே, திண்மை, தண்மை, வெம்மை, சலனம் என்பன. இவை குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட சூழலில் சேர்வதனாலேயே உலகில் நாம் காணும் எல்லாப் பொருட்களும் தோன்றுகின்றன. உயிர்களை எடுத்துக்கொண்டால் இந்த நான்கின் கூட்டத்தில் பிறந்த உயிரின் வளர்ச்சி  நிலையில் ஐம்புலன்களும், அவற்றின் உணர்ச்சியும், அறிவும் தோன்றுகின்றன. பூதங்களின் சேர்க்கையால் தோன்றுபவை உடலும் உயிரும் என்பதால் அவற்றிற்கு அழிவும் உண்டு. இந்தச் சேர்க்கை குலையும்போது அவை அழிந்து போக ஆரம்பிக்கின்றன. பின் அத் தோற்றத்திற்கு முன்பு இருந்த நிலையை அடைகின்றன. பஞ்ச பூதங்கள் என்று நாம் இன்று சொல்லித் திரிவதில் ஆகாயத்தை உலகாயதர் ஏற்கவில்லை. இன்றைய அறிவியலும் ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும். உயிர் முதலில் தோன்றுகிறதா உடல் முதலில் தோன்றுகிறதா என்ற கேள்விக்கு அவர்களின் பதில் உடல்முதலில் தோன்றுகிறது என்பதுதான். உடல் தோன்றிய பின்னர்தான் உயிர் தோன்றுகிறது. 
உலகாயுதம் என்றால் காணக்கூடிய இயல் உலகின் வரையறை என்று பொருள். உலகின் தோற்றத்திற்கு உலகுக்கு வெளியே இன்னொரு காரணம் அல்லது காரணர் இல்லை. அது எந்த வேள்விச் சடங்குகளின் துணையுமின்றித் தானாக இயங்கக் கூடியது என்ற பொருளில் இச்சொல் வடிக்கப்பெற்றிருக்கலாம்.

இத்தகைய உலகாயுதம் உடலுக்கு புறம்பாக ஆத்மா கிடையாது என்று விளக்குகின்றனர். இயற்கை ஆற்றல் கூறுகளின் சேர்க்கையிலிருந்து ஒரு மறைபுதிர் நிலையில் தன்னுணர்வுள்ள உடல் உருவாகிறது. இதில் உயிர் இயல்பாக இருக்கிறது. உயிர் உடலைவிட்டுத் தனித்து இல்லை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்பவற்றைச் சேர்த்து மெல்லும்போது சிவப்பு நிறம் உண்டாவது போன்று உடல் கூறுகளின் சேர்கையால் உயிர் தோன்றுகிறது. இது போன்று அறிவற்றாலும் தன்னுணர்வுமுடைய உடலே ஆன்மா மற்றபடி ஆன்மா என்று ஒன்று இல்லை 'நான் பருத்திருக்கிறேன்' என்று ஒருவர் சொல்லும் போது தன் உடலையே குறிப்பிடுகிறார். சிந்தித்தல், பார்த்தல், கேட்டல், ஞாபகம் என்பன ஆன்மாவின் தொழில் அல்ல என்று கூறலாம்.

யாகத்தில் கொல்லப்படும் மிருகம் சொர்க்கத்தை அடையுமானால் புரோகிதர்களின் வயது முதிர்ந்த உறவினரை யாகத்தில் பலியிடுவதன் மூலம் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்க முடியாது. இறந்தவர்க்கு படைக்கும் உணவு இறந்தவர்க்கு சேர்வதில்லை ஒரு மனிதனின் இறப்பின் போது நான்கு பூதங்களும் அவற்றின் சொந்த இடங்களுக்கு திரும்புகின்றது. நிலத்தின் அணுக்கள் நிலத்துக்கும் நீரின் அணுக்கள் நீருக்கும் காற்றின் அணுக்கள் காற்றுக்கும் நெருப்பின் அணுக்கள் நெருப்புக்கும் திரும்ப செல்கின்றது. ஒரு உயிர் அதன் உடலை விட்டு இன்னோரு உடலுக்கு செல்ல முடியாது ஏனெனில் இரு உடல்களில் ஒரு உயிர் இருக்க முடியாது. இரண்டு உயிர்களும் வௌ;வேறு தன்மை கொண்டவை கர்ப்பத்திலிருக்கும் போது ஒரு உயிர் அறிவினை பெற இயலாது என உலகாயுதர்கள் வாதிடுகின்றனர். அங்கு புலன்கள் இல்லை எனவே உடலுக்கு புறம்பாக ஆன்மா என்ற ஒன்று இல்லை எனலாம். 

ஆன்மா என்று தவறாக அழைக்கப்படுகின்ற உயிராற்றல் அல்லது உள்ளாற்றல் இறப்பின்போது உடலைப் போன்றே ஒரு முடிவுக்கு வந்து அழிந்து விடுகிறது. இறப்புக்குப் பின்னரும் வாழ்வு இருக்கிறது, இறவாமையுடைய இறைவன் இருக்கின்றார். என்றெல்லாம் எண்ணுவது அறியாமை, பலவீனம் ஆகியவற்றின் விளைவேயாகும். மேலும் ஆன்மா என்ற ஒன்று இல்லாததால் வினைப்பறவியும் இல்லை இவ்வாறு இந்திய மெய்யியல் சிந்தனைகளில் வினைப்பிறவியையும் ஆன்மாவையும் ஏற்றுக்கொள்ளாத ஒரே சிந்தனை உலகாயுதம் ஆகும். எனவே உடலுக்கு புறம்பாக ஆத்மா கிடையாது என்ற முடிவுக்கு வரலாம்.

No comments:

Post a Comment