Wednesday, June 29, 2016

வானியலின் பல்வேறு வளர்ச்சிகளில் பங்களிப்பு செய்த தைக்கோ டி பிராகே கெப்லர் தொலமி கொப்பனிக்கஸ் போன்றோரின் பணியினை தொகுத்து கூறுக?

மெய்யியல் துறையில் விஞ்ஞானம் என்னும் துறையும் முக்கியம் பெற்று விளங்குகிறது. விஞ்ஞானத்தில் வானியலின் வளர்ச்சிக்கு தைக்கெடி பிராகே, கெப்லர், தொலமி, கொப்பனிக்கஸ் போன்றோர் அதிகளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளமையை காணலாம்.

தைக்கொடி பிராகே (1546 - 1601) 1546 இல் டென்மார்க்கில் பிறந்த பிறாகே 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற வானியல் புரட்சியாளர்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றார். தொலைநோக்கி கண்டு பிடிக்கப்படுதவற்கு முன்பிருந்த தலை சிறந்த வானியலாளர்களில் இறுதியானவராக விளங்கிய இவர் உலகம் கண்டிராத சிறந்த அவதானியாகவும், நுண் ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

பிராகேயின் பணிகள் :
1. ஆயித்திற்கு மேற்பட்ட வானியல் அவதானங்களை மேற்கொண்டமை.
2. 1672 இல் மிநோவா நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தமை.
3. நட்சத்திர அட்டவணை ஒன்றை தயாரித்து வைத்திருந்தமை. (இவ் அட்டவணையைப் பயன்படுத்தியே கெப்லர் தனது நீள்வழைய விதிகளைக் கண்டுபிடித்தார்)
4. வால் வெள்ளிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டமை.
5. கோள்களின் இயக்கம் குறித்து தொலமியின் கொள்கை கொப்பனிக்லசின் கொள்கையுடன், கைகோடி பிரகேயும் மூன்றாவது ஒரு கொள்கையை வகுத்திருந்ததாக கூறப்படுகிறது.
6. பிறாகே கவின் தீவில், தான் அமைத்த ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படுவதற்காக பல கருவிகளை உருவாக்கியிருந்தார். இவை பிற்கால வானியல் ஆய்வுகளுக்கு உதவின எனக் கூறப்படுகின்றது.

ஜொகன்னஸ் கெப்லர் 1571 இல் ஜேர்மனியில் பிறந்த இவர் கோள்களின் நீள்வளைய விதிகளைக் கண்டபிடித்த சிறந்த வானியலாளராகவும் கணித மேதையாகவும் விளங்குகின்றார். இவர் 1956 இல் வானியல் பற்றிய தனது முதல் நூலை எழுதினார். இந்நூலில் அவர் விளக்கிய கோட்பாடுகள் தவறாக அமைந்த போதும் அதில் அவர் கையாண்ட முறைகளைக் கருத்திற் கொண்ட தைக்கொடி பிறாகே தனது ஆய்வு கூடத்தில் வேலைசெய்ய வருமாறு கேட்டார். பிறாகேயின் மரணத்தின் பின் அவர் விட்டுச் சென்ற குறிப்புக்களைப் பயன்படுத்தி செவ்வாய்கிரகத்தைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். ஞாயிற்றுத் தொகுதியின் ஒழுங்கமைப்புப் பற்றிய ஆய்வுகளில் இவர் ஈடுபட்டார். இதற்கு முன்மாதிரியாக கணித அடிப்படையிலான ஞாயிற்றுத் தொகுதியின் மாதிரி உரு ஒன்றையும் இவர் அமைத்தார். இதனை அமைக்கும் போது கெப்லர் அரிஸ்டோட்டிலின் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார் இதனால் இத்திட்டமும் தவறாகவே அமைந்தது.
கெப்லர் கோள்களின் நீள்வட்ட சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார். அதாவது கெப்லர் வாழ்ந்த காலத்தில் செய்வாய்க் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி தொடர்பாக பாரிய பிரச்சினை நிலவியது. 'தைக்கோடி பிறாகே' இந்த கடமையினை கெப்லருக்குச் சமர்ப்பித்தார். அவதானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கெப்லர் செய்வாய்க் கிரகத்தினை அவதானிக்கக்கூடிய நான்கு இடங்களைத் தெரிவு செய்து அதன் ஈர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதைத் தேடிக்கொள்ள முற்பட்டார். இது தொடர்பான கணிப்பீட்டுக்காக 900 நாள்களை வீணாக்கியதுடன் ஏறத்தாழ 5 வருடங்கள் இதில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தின் முடிவில் பல தவறுகளை நிராகரித்து தற்செயலாக சரியான முடிவைப் பெற்றார். செவ்வாய்க்கிரகத்தின் சரியான ஒழுக்குப்பாதை சூரியனை மையமாகக் கொண்ட நீள்வட்ட வடிவம் என்பதை அவர் கண்டுகொண்டார். அதன் அடிப்படையில் கெப்லர் கோள்களின் இயக்கம் பற்றிய மூன்று விதிகளையும் முன்மொழிந்தார். அவை

1. நீள்வளைய விதி
ஒவ்வொரு கோளும் சூரியனை குவிவுமையமாகக் கொண்டு சூரியனைச்சுற்றி நீள்வட்டப்பாதையில் அசைகின்றன.

2. பரப்பு விதி
கோள்கள் சூரியனை அண்மிக்கும்போது கோள்களின் ஓட்டவேகம் அதிகரிக்கும். சூரியனில் இருந்து விலகிச் செல்லும்போது வேகம் குறையும்.

3. இசைவு விதி
ஒரு கோள் சூரியனைச் சுற்றி வர எடுக்கும் நேரமானது சூரியனுக்கும் அக்கோளுக்கும் இடைப்பட்ட தூரத்தில் தங்கியுள்ளது.

ஒளியியல் கோட்பாட்டிற்கும் கெப்லர் பல பணிகளைச் செய்ததாக கூறப்படுகின்றது. கொப்பனிக்கஸ், கலிலியோ போன்றோரால் கண்டுபிடிக்க முடியாத வானியல் சிக்கலுக்கு கெப்லரின் விதிகள் தீர்வுகண்டன. எனினும் கோள்கள் ஏன் நீள்வட்டப்பாதையில் இயக்குகின்றன என்பதற்கு இவர் விளக்கம் கூறவில்லை. இதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நியூட்டன் இதற்கு விளக்கம் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜொகானஸ் கெப்லர் ஜேர்மனிய கணிதவியலாளர் ஆவார். இவர் அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய நூல்களில் முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். கெப்லர், கிராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்ப் பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனரல் வலென்ஸ்டைனுக்கு அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் தைக்கோ பிராகே என்பவருக்கு உதவியாளராக இருந்தார்.

இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார். இவர் சிலவேளைகளில் 'முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்' எனக் குறிப்பிடப்படுகிறார். கார்ல் சேகன் இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் கூறிப்பிட்டார்.

ஜொகான்னஸ் கெப்லர் டிசம்பர் 27, 1571 இல் வைல் டேர் ஸ்டாட்ற் என்னும் இடத்தில் பிறந்தார். இது இப்போது ஜெர்மனிய மாநிலமான பாடென் வுட்டம்பேர்க் பகுதியில் அமைந்துள்ளது. கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான என்றிக் கெப்லர் ஒரு வணிகராவார். கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் நெதர்லாந்தில் நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஜொகான்னஸ் கெப்லர் பிறந்த போது அவர் ஒரு உடல்வலு குறைந்த குழந்தையாக இருந்தார்.

சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577 இல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாக வும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்.

1589 இல் இலக்கணப் பாடசாலை, இலத்தீன் பாடசாலை மற்றும் மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இறையியலும் கற்றார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிலைநாட்டினார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ் 1583 இலிருந்து 1631 வரை கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின் முறைமையையும், கொப்பர்நிக்கசின் முறைமையையும் கற்றார்.

மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும் சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும் அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக கிராசிலுள்ள (பின்ன கிராசு பல்கலைக்கழகம்) கிறிஸ்தவ சீர்திருத்தப் பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில் ஏப்ரல் 1594 இல் அவ்வேலையில் சேர்ந்தார்.

கெப்லரின் முதல் பெரிய வானியல் புத்தகம் மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம் அகிலத்தின் புதிர் என்பதாகும். இதுவே கொப்பர்நிகசின் முறைமையை எதிர்த்த முதல் புத்தகமாகும். கெப்லர் ஜுலை 19, 1595 இல் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைப் பெற்றார். கிராசில் கற்பித்துக் கொண்டிருக்கும் போது, இராசி வட்டத்தில் சனிக் கோளினதும், வியாழக் கோளினதும் ஆவர்த்தனப் பொருந்துகையை விளக்கும் போது, ஒழுங்கான பல்கோணியொன்று குறித்த விகிதத்தில் வெளி வட்டமொன்றையும், உள்வட்டமொன்றையும் கொண்டிருக்கும் என அவர் உணர்ந்தார். இதற்கு அகிலத்தின் அமைப்பை அவர் காரணங் காட்டினார். அறியப்பட்ட வானியல் அவதானிப்புகளைக் கொண்டு ஒரு சீரான பல்கோணிகளின் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பிறகு, கெப்லர் முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டார்.

இதன்போது ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே கோளத்தினால் சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒருகோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும் போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஆறு அடுக்குகளும், அப்போது அறியப்பட்டிருந்த ஆறு கோள்களான, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்திருந்தது. பிளாட்டோனியத் திண்மங்களான எண்முகி, இருபது முகி, பன்னிருமுகி, நான்முகி, சதுரமுகி ஆகியவற்றைச் சரியான ஒழுங்கில் வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் மாதிரியுருவில் அத்திண்மங்களைச் சூழ்ந்துள்ள கோளங்களுக்கிடையிலான இடைவெளிகள் அண்ணளவாக கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதும் போது அக்கோள்களின் பாதைகளுக்கிடையிலான தூரங்களுக்கு விகிதசமனாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கோளினதும் சுற்றுப் பாதையின் நீளத்துக்கும் அதன் சுற்றுகாலத்துக்கும் இடையில் தொடர்பொன்றைக் கண்டுபிடிக்க கெப்லருக்கு இயலுமாயிருந்தது.
உட்கோள்களிலிருந்து புறக்கோள்கள் நோக்கிச் செல்லும் போது, சுற்றுக்காலங்களின் விகிதத்தின் அதிகரிப்பானது, சுற்றுப் பாதையின் நீளங்களுக்கிடையிலான வித்தியாசத்தின் இரு மடங்காகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், இச்சூத்திரம் திருத்தம் குறைவானதாக இருந்தமையால் பிற்காலத்தில் கெப்லர் இச்சூத்திரத்தை நிராகரித்தார். இத்தகைய முறையிலான வானியல் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை கெப்லர் வழங்கியுள்ளார்.

கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டின் இன்னொரு மேதையான தொலமி பூமியை மையமாகவும்அதைச் சுற்றி 8 கோள வளையங்களில்முறையேசந்திரன்,புதன்,வெள்ளி,சூரியன்,செவ்வாய்,வியாழன்,சனி, மற்றும் நிலையான நட்சத்திரங்கள் என்பன அமையுமாறு ஒரு கணித வரைபடத்தை ஆக்கினார். இவ்வரைபடம் தொலைக்காட்டிகள் மூலம் நோக்கப் படாத கண்ணால் பார்க்கக் கூடிய வின்வெளியின் பிரத்தியட்சத் தோற்றத்தை வெறும் அவதானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள பொருட்களின் இயக்கத்தை விளக்கியது. இவ்வரைபடம் முழுதும் விஞ்ஞான ரீதியாக இல்லாவிட்டாலும் கிறித்தவ தேவாலயங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவர்களின் புவி மையப் பரப்புரைகளை நியாயமாக்கி வந்தது. எனினும் கி.பி 1514 இல் நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் தொலமியின் மாதிரியை விட மிக எளிமையான வரைபடத்தை முன்வைத்தார். இதில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன் எனவும் சூரியனை மையமாகக் கொண்டு சந்திரன்,ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் வட்ட ஒழுக்கில் வருகின்றன என்றும் அவர் விளக்கியிருந்தார். எனினும் இவரின் மாதிரியை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மேலும் ஒரு நூற்றாண்டு ஆனது.

பூமி நிலையாக அமைந்திருப்பதாகவும், கோள்களையும், விண் மீன்களையும் உள்ளடக்கிய அண்டம் முழுவதும் அதைச் சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோள்களும், விண்மீன்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்று தொலமி எடுத்துரைத்தார். அந்தக் கருத்தின் அடிப்படையில், நாள்தோறும் காணும் வானியல் நிகழ்வுகளை அவரால் நுட்பமாக விளக்க முடிந்தது. அவரது கொள்கை ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்தது. தொலமியின் கொள்கையை முதல் முதலாக 1512 இல் புகழ்பெற்ற போலந்து நாட்டுத் துறவியான நிக்கோலஸ் கொபர்நிக்கஸ் மறுத்தார். கொபர்நிக்கஸ், மையக் கதிரவன் கோட்பாட்டை எடுத்துரைத்தார். அதன்படி சூரியன் நிலையானதாக அமைந்து கோள்கள் அதைச் சுற்றி நுட்பமாக வட்டப் பாதையில் இயங்குகின்றன என்று விளக்கப்பட்டது.

கொப்பனிக்கஸ் (1473 - 1543) போலாந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வானியல் அறிஞர். சட்டம், மருத்துவம், கிறிஸ்தவ சமய சட்டவியல், வானியல் ஆகிய துறைகளிலே தமது இளமைக் காலக் கல்வியைக் கற்றார். கொப்பனிக்கஸ், பூமியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன எனக்கூறிய கருத்தால் கவரப்பட்டு அதனைப்பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் அவதானிப்புக்களையும் மேற்கொண்டு தனது புகழ்பெற்ற நூலாகிய 'விண்மண்டலற் சுழற்சி' என்பதை எழுதினார். இதில் அவர் சூரியமையக் கொள்கையை விளக்கியதுடன் அதற்குரிய சான்றுகளையும் தெளிவாகக் காட்டியுள்ளார். சூரியனே நடு நிலையாகவும், பூமி என்பது ஒரு கோளாக அந்தச் சூரியனைச் சுற்றி ஓடி வருவதாகவும் உள்ள பிரபஞ்சம் ஒன்றின் பொதுத்தோற்றம் ஒன்றை கொப்பனிக்கஸ் கூறினார். பருவங்கள் ஏற்படக் காரணம் என்ன என்று விளக்கினார். இத்தாலி நாட்டிலிருந்து காண்போருக்கு வானில் நட்சத்திரங்கள் எந்ததெந்த இடங்களில் இருப்பவாக தோன்றுகின்றனவோ அதே இடங்களில் இருப்பவையாகவே எகிப்து நாட்டில் உள்ளவர்களுக்கு தோன்றுவதில்லை என்றார்.

பூமியின் தென்கோளத்தில் இருந்து காணக்கூடிய நட்சத்திரங்களை எல்லாம் அதன் வட கோளத்தில் இருந்து நம்மால் காணமுடியாது என்றார். கப்பலின் பாய்மரக் கூம்பின் உச்சியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் அந்தக் கப்பல் கடலில் தொலைவில் செல்லச்செல்ல கரையில் இருந்து பார்ப்போருக்கு அது சிறிது சிறிதாக தாழ்ந்து வருவது போலத் தோன்றுகின்றது. கடைசியில் அந்த விளக்கு கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போகின்றது. நீருக்குள் அமிழ்ந்து போவது போலும் தோன்றுகின்றது. பூமி கோளவடிவானது என்று நிரூபிப்பதற்கு இந்த விளக்கங்களை எல்லாம் பயன்படுத்தினார்.

சூரியமைய கொள்கை
சூரியன் பிரபஞ்சத்தின் மத்தியில் உள்ளது. அதனைச் சுற்ற பூமியும் ஏனைய கோள்களும் இயங்குகின்றன. பூமி தன் அச்சில் சுற்றுகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றி அசைகின்றது. இவற்றில் அசைவு வட்டவடிவமானவை என்று எடுகோள்களின் அடிப்படையிலேயே கொப்பனிக்கஸ் தனது சூரியமையக் கருதுகோளை தனது நூலில் விளக்கியுள்ளார்.

இக்கொள்கையின் விளைவுகள் :

1. கோள்களில் இயக்கம் குறித்து சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சூரியமையக் கொள்கை வழி வகுத்தது.

2. தைகோடி பிறாகே தனது ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

3. கெப்லர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

4. அரிஸ்டோடிலின் சூரியமையைக் கோட்பாடு பற்றி முதலில் கூறியபோதும் அவருடைய கருத்து வெறும் ஊகமாகவே இருந்தது. ஆனால் கொப்பனிக்கஸ் கணிதமுறையில் நிரூபனங்களைக் காட்டி ஓர் பயன் உள்ள கோட்பாடாக மாற்றி அமைத்தார்.

5. வானியல் எதிர்வு கூறல்களை மேற்கொள்ள உதவியது.

6. வானியல் உண்மைகளை இக்கோட்பாட்டைக் கொண்டு சரிபார்க்க முடிந்தது.

7. இக்கோட்பாட்டை புவிமையக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு அதை தவறு எனக் காட்ட முடிந்தது.

கொப்பனிக்கஸின் கோட்பாடு புரட்சி எனப்படுவதற்குரிய காரணங்கள் :

1. அண்டம் பற்றி இதுவரை இருந்த கருத்தோட்டங்கள் முழுவதையும் அடியோடு மாற்றி அமைத்தது.

2. உலகு பற்றியிருந்த தத்துவக் கண்ணோக்கினை மாற்றி அமைத்தது.

3. கிறிஸ்தவ மதபீடத்தினால் தனக்கு எதிர்ப்புக்கள் நிகழும் என்றபோதும் தனது கருத்துக்களை துணிந்து வெளியிட்டமை.

4. தனது கோட்பாடடை கணிதமுறை கணிப்புக்களுடன் ஒரு பயன் உள்ள அறிவியல் கோட்பாடாக வகுத்தமை.

5. கலிலியோ, கெப்லர் ஆகியோரின் பணிகளுக்கு முன்னுரையாக அமைந்தமை.

6. கொப்பனிக்கஸ் தனது நூலில் முன்னுரையில் கணிதக் கோட்பாடுகளை பயன்படுத்தி முடிவுகளைப் பெறும்போது இவ்வாறான விசித்திரமான முடிவுகளை பெறவேண்டி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளமை.

குறைபாடு 
1. இவருடைய கோட்பாட்டால் கோள்களின் இயக்கம் வட்டவடிவமானது எனக் கூறியமையால் கணித முறைப்படி சிக்கலானதாகவும் யதார்த்தத்தன்மை குறைந்ததாகவும் காணப்படுகின்றது.

2. இவருக்குப்பின் எழுந்த வானியல் சிந்தனைகளின் படி இப்பிரபஞ்சத்தில் பல சூரிய மையங்கள் உண்டு என்ற கருத்து கூறப்பட்டுள்ளமை.

கொப்பனிக்கஸ் கருத்துகளில் குறைப்பாடுகள் காணப்படினும் கலிலியோ, கெப்லர் போன்றோரின் பணிகளுக்கு கொப்பனிக்கசின் கொள்கை முன்னுரையாக அமைந்தது. வரலாற்று ரீதியில் நோக்குவோமாயின் கொப்பனிக்கசின் 'விண்மண்டலற் சுழற்சி' என்ற நூலே நவீன வானியல், ஏன் நவீன அறிவியலின் தோற்றுவாயாகவும் அமைந்தது என்பது மறுக்க முடியாது.
இத்தகைய முறையில் தைக்கெடி பிராகே, கெப்லர், தொலமி, கொப்பனிக்கஸ் பேன்றோர் பங்களிப்பின் மூலம் வானியலின் பல்வேறு விடயங்கள் வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது எனலாம்.


















No comments:

Post a Comment